Saturday, 21 July 2012

தாயெனும்...


தாயெனும்...


பிறந்தவுடன்
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.