Sunday 29 July 2012


உன் கல்லறை அருகில் ஒரு இடம் கொடு  

துடுப்பில்லாத தோணி போல் 
துயரக் கடலில் மிதக்கின்றேன் 
துணையாய் வந்த எந்தையே 
நீண்ட தூக்கம் நீ சென்றதால் 
இறுக்க உன் கரம்பற்றி நடந்தேன் 
இறுதிவரை இருப்பாய் என்றெண்ணி 
என் நடை தளர்ந்து போனது 
உன் பற்றிய கரம் ஓய்ந்ததால் 
என் தொலைபேசி அழைக்கும்போதெல்லாம் 
உன் கனிந்த பாசக்குரல் கேட்க 
ஓடோடி அங்கு வந்திடுவேன் 
என்னை ராஜா  என்று நீ அழைக்க 

என் ஆவி கொள்ளை போவதுண்டு 
உன் அன்பு குரல் கேட்காமல் 
என் தூரிகை கூட எழுத மறுக்கிறது 
நம்பிக்கை ஊட்டும் உன் குரல் 
மௌனமாய் போனதால் 
தும்பிக்கை இல்லா களிறு போல் 
துவண்டு நான் கிடக்கின்றேன் 
உன்னை கேட்காமல் என் பாதம் கூட 
ஓரடி எடுத்து வைக்க மருளும் 
உன்னை பார்க்காத நாளெல்லாம் 
பல யுகமாய் எனக்கு தோன்றிடும் 
இன்று உம் திருமுகம் காண முடியாமல் 
எனக்கு உலகமே சூனியமாயிற்று 
அழகான சிம்மாசனம் ஏற்படுத்தி 
அதில் அமரவைத்து என்னை அழகு செய்தாய் 
அருகில் வெண்சாமரமும் வீசி நின்றாய் 
காவல் தெய்வமாய் நின்ற உனை 
காலன் கூட்டி சென்றதால் 
கலங்கி நின்றேன் நடை பிணமாய் 
எனை காத்து நின்ற கர்த்தாவே 
உனை கூட்டி சென்ற இடம் உரைப்பாய் 
தேடி வந்திடுவேன் உன்னிடம் 
இல்லையேல் பேதழிக்கும் என் மனம் 
உன் கல்லறை அருகில் இடம் தந்தால் 
இளைப்பாரிடும் என் மனம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.