Wednesday 25 July 2012

திருநெல்வேலி

திருநெல்வேலி (ஆங்கிலம்:Tirunelveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.



புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.73° N 77.7° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 411,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் [5] மிகவும் பிரசித்தி பெற்றது.

பெயர்க் காரணம்

திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலைய முகப்பு
முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.
சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.
மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

இரட்டை நகரங்கள்


திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

தமிழின் தோற்றம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.திருநெல்வேலி ம்ற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் நெல்லை தமிழ் என்று வழங்கப்படுகிறது.

[தொகு]திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது "திருநெல்வேலி அல்வா"தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு.

[தொகு]முக்கிய இடங்கள்

நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.

[தொகு]யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகருக்கு வடக்கே ஏறத்தாழ இரண்டரைக் கிலோ மீற்றர் தூரத்தில் திருநெல்வேலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கே தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(University of Jaffna) அமைந்துள்ளது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.