Wednesday 3 October 2012

உலகைக் குலுக்கிய புகைப்படம் !


நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படம் 

எரியும் தியாகம் 

ஜூன் 11,1963 ஆம் ஆண்டு வியட்நாமின் தலைநகரான சாய்கான் நகரில் ‘Thich Quang Duc’ என்னும் இந்த புத்தத் துறவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டார். அப்போது தெற்கு, வடக்காக பிரிந்திருந்த வியட்நாமில், தெற்கு வியட்நாமை ஆண்ட ‘Diem’(Ngo Dinh Diem) அரசாங்கம், புத்தமதத்தின் மீதும் புத்த துறவிகள் மீதும் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராக இதை அவர் செய்தார். இப்படத்தை எடுத்த ‘மால்கம் பௌரவுன்’(malcolm Browne) இப்படத்திற்காக புலிட்சார் விருதுப் பெற்றார்.

Ngo Dinh Diem அரசாங்கம்:

1954 ஆம் ஆண்டு வியட்நாமை விட்டு பிரான்ஸ் வெளியேறியப் பிறகு தெற்கு வியட்நாமின் முதல் சனாதிபதியாகப் பதவியேற்றவர் இந்த ‘Ngo Dinh Diem’. பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததினால், வட அமெரிக்காவின் உதவி பெற்று தன்னை வியட்நாம் குடியரசின் முதல் சனாதிபதியாக நிலை நிறுத்திக்கொண்டவர். ஊழலும் சீர்கெட்ட ஆட்சி முறையும் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய இவர், வியட்நாமின் பூர்விக மதங்களயும், பரவலாக பரவி இருந்த புத்தமத்தையும் அழிக்க நினைத்தார். பல முறைகளில் மதத் துவேசத்தை வெளிப்படுத்தினார். புத்தத் துறவிகளின் மீது எண்ணிலடங்கா அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இது மதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இப்போராட்டத்தத்தின் போதுதான் அந்த புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார். பிறகு வட அமெரிக்கா தன் ஆதரவை விளக்கிக் கொண்டது. நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.

புத்தத்துறவி ‘Thich Quang Duc’:
ஏழுவயதிலேயே ஆன்மீக வாழ்க்கைக்கு வந்த இவர், தன் இருபதாவது வயதில் ஒரு முழுமையான புத்தத்துறவியானார். மதபோதனைகளும் பாடங்களையும் நடத்திக்கொண்டிருந்தவர். புத்த மாடாயங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

‘Diem’ ஆட்சிக்காலத்தில் புத்தபிட்சுக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்தும், புத்தமதத்தை காக்கும் பொருட்டும் தன்னை எரியூட்டிக்கொண்டார். தன்னை எரியூட்டிக்கொண்டதின் மூலம் உலகத்தாரின் கவணத்தை பெறமுயன்றார்.

ஜூன் 11, 1963-இல் சாய்கானின் முக்கிய வீதி ஒன்றுக்கு, இரண்டு சக துறவிகளோடு ஒரு காரில் வந்து இறங்கினார். நடுவீதிக்கு சென்று அமைதியாக தியான நிலையில் அமர்ந்துக் கொண்ட இவர் மீது அவரின் சக துறவி ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். பிறகு தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார். நான்கு அடி உயரம் தீ கொழுந்துவிட்டு எரிந்த போதும் சத்தம் போடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் சுற்றி நின்ற புத்த பிட்சுகளை மீறி அவர்களால் செல்ல முடியவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி தரையில் பயபக்தியோடு மண்டியிட்டு, எரிந்துக்கொண்டிருந்த துறவியை தொழுக துவங்கினார். பெரும்பாலானோர் அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, சிலர் அலறவும் சிலர் பிராத்தனைச் செய்யவும் துவங்கினார்.

அங்கே குழும்பி இருந்த புத்தத்துறவிகளும் அந்த வழியாக கடந்துச்சென்ற பொதுமக்களும் எரிந்துக்கொண்டிருந்த துறவியின் முன் மண்டியிட்டு வணக்கத்துவங்கினார்கள். ஒலிபெரிக்கியில் துறவிகள் தொடர்ந்து முழக்கமிடத்துவங்கினர் “ஒரு புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார், ஒரு புத்தத்துறவி தியாகி ஆகிறார்” என்று.

தியான நிலையிலேயே பத்துநிமிடங்கள் எரிந்த அவரின் உடல், முழுமையாக எரிந்தப் பின்பு மெதுவாக முன்பக்கமாக சாய்ந்தது. அங்கே இருந்த புத்தத்துறவிகள் ஒரு மஞ்சள் துணியில் அவரின் சாம்பலையும் மற்ற பாகங்களையும் எடுத்து சவப்பெட்டியில் அடைத்தனர். பின்பு அருகில் இருந்த புத்த மாடாயலத்திற்கு எடுத்துச் சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களும் துறவிகளும் அங்கே கூடத்துவங்கினர். அன்று மாலை சூரியன் மறைந்த நேரத்தில் வானில் அழுதபடி இருந்த புத்தரில் உருவத்தை பார்த்ததாக ஆயிரக்கணக்கான மக்கள் சொன்னார்கள். துறவியின் உடல் ஜூன் 19 ஆம் தேதி மீண்டும் எரியூட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் அவரின் இதயம் மட்டும் தீயினால் எரியாமல் அப்படியே இருந்தது. அந்த இதயம் ஒரு குடுவில் வைக்கப்பட்டு ‘தியாகத்தின் குறியீடாக’ இன்றும் போற்றப்படுகிறது.

புகைப்படக்காரர் ‘மால்கம் பௌரவுன்’ எடுத்த இப்படம் உலகம் முழுவதும் பரவியது. மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்த மக்கள் மிரண்டுப் போனார்கள். அப்போதைய வட அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடி இப்படத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் “வரலாற்றில், இதற்கு முன்னால் எந்தவொரு செய்திப் புகைப்படமும் உலகத்தாரிடையே இந்த அளவிற்கு உணர்ச்சியை உருவாக்கியதில்லை”.

அங்கே வியட்நாமில் அரசாங்கம் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அடக்குமுறைகள் அதிகரித்தன. போராட்டாமும் அதிகரித்தது. பல புத்ததுறவிகள் தங்களை எரித்துக்கொள்ளத்துவங்கினர். வட அமெரிக்க அரசாங்கம், ‘Diem’-மிற்கு கொடுத்து வந்த தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது. அதன் பின் நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.

பிற்காலத்தில் வியட்நாம் போரை எதிர்த்து வட அமெரிக்காவில் இதே முறையில் வியட்நாமிகள் கிட்டத்தட்ட நூறுபேர் தங்களை எரித்துக் கொண்டுள்ளனர். இப்படி தங்களை தாங்களே எரித்துக்கொள்வதின் மூலம் எதிர்ப்பைக் காட்டும் இந்த முறை, உலகமுழுவதும் பின்பற்றப்படுகிறது.

1968-இல் சோவித் யூனியனியனில், மத்திய கிழக்கு நாடுகளில், 2010-இல் துனுசிய எழுச்சியின் போது, 2011-இல் அல்ஜீரியா, எகிப்து, சவுதி அரேபியா மற்றும் சிரியா போராட்டங்களிலும் இப்படியான எரியூட்டிக் கொள்ளும் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது.

1990-இல் வி.பி.சிங் காலத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற போது, அதை எதிர்த்து ‘ராஜிவ் கோஸ்வாமி’ என்ற கல்லூரி மாணவன் டெல்லியில் தன்னை எரித்துக் கொள்ள முயன்றான். அப்போது காப்பாற்றப்பட்ட அவன் 2004-ஆம் ஆண்டு தன் முப்பத்தி மூணாவது வயதில் அதன் பாதிப்பில் இறந்து போனான்.

தமிழகத்தில் ‘முத்துக்குமார்’ மற்றும் ‘செங்கொடி’-இன் வடிவில் இந்த போராட்ட வடிவம் இன்று தொடரப்படுகிறது. இப்படியான மரணங்களை வரவேற்போர் யாருமில்லை, நியாயப்படுத்தி விட முடியாது. அதேநேரம் அலைச்சியப்படுத்தி விடவும் கூடாது.

முற்றும் துறந்த ஞானி புத்தபிட்சு முதல் பால பருவத்திலிருக்கும் செங்கொடி வரை நிகழ்ந்த இந்த மரணங்கள் வெளிப்படுத்தும் செய்திகள் இரண்டு. ஒன்று அரசாங்கத்திற்கு எதிராக விடப்பட்ட அரைக்கூவல். மற்றொன்று தன் சக மனிதனை நோக்கி வைக்கப்பட்ட மன்றாடல்.

இத்தகையத் தியாகங்கள் ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் அதே நேரம், சுரனையற்ற தன் சக மனிதனையும் கண்டிக்கிறது.

இவர்களின் செயலை முட்டாள் தனம் என்று வரையறுக்கும் அதே நேரம், அதன் பின்னே இருக்கும் தியாகத்தையும் உன்னத லட்சியத்தையும் வீரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இத்தகைய மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்க ஒரே வழி, அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவர்களைக் கொண்டுச்செல்லாமலிருப்பதுதான். அந்தப் பொறுப்பு ஆளுபவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ சக மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.